அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் பாகுபாடின்றி இலவச பிரயாணச் சீட்டு (பாஸ்) வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாணச் சீட்டு (பாஸ்) வழங்கப்பட்டு பெரும்பாலான ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படாததை சுட்டிக்காட்டி தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுள
கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஊடகவியலாளர்களும், ஊடக அமைப்புக்களும் தங்களிடம் இலவச பிரயாணச் சீட்டு (பாஸ்) வழங்குமாறு பலதடவை கோரிக்கை விடுத்ததை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம். மிக விரைவிலேயே ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாணச் சீட்டு (பாஸ்) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் பலதடவை கூறியுள்ளீர்கள்.
அந்த வகையில் கிழக்கு மாகாண கல்வி போக்குவரத்து அமைச்சினால் பாகுபாடு காட்டப்பட்டு, அரசியல் பார்க்கப்பட்டு, குடும்பங்கள் பார்க்கப்பட்டு குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டு பெரும்பாலான ஊடகவியலாளர்கள் பறக்கனிக்கப்பட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.
அரசியல் வாதிகளின் வளர்ச்சியில் மிகக்கூடிய பங்கு வகிக்கின்ற ஊடகவியலாளர்களை புறந்தல்லி தமக்கு விருப்பமான ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு இந்த இலவச பிரயாணச் சீட்டு (பாஸ்) முறையை வழங்க நடவடிக்கை எடுத்தது எந்த வகையில் நியாயமாகும்? என்று கிழக்கு மாகாண முதலமைச்சராகிய தங்களிடம் கேட்க விரும்புகின்றோம்.
எனவே பல்வேறு கஷ்டங்களுக்கும், சவால்களுக்கும் முகம்கொடுத்து தமது ஊடகத்துறையை மிகச்சிறப்பாக செய்துவரும் சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவச பிரயாணச் சீட்டினை (பாஸ்) வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(எம்.எப். அலாசிபாக்)